Published : 15 Oct 2021 12:14 PM
Last Updated : 15 Oct 2021 12:14 PM

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று சந்தித்தார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி பதவியேற்றார். அப்போதிலிருந்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் அவரை அலுவல் ரீதியாகவும், மரியாதை நிமித்தமாகவும் சந்தித்து வருகின்றனர்.

முக்கியமாக, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்திருப்பதாகவும், திமுக எம்.பி.க்கள் மீதான குற்ற வழக்குகளில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் மனு அளித்தனர்.

இதையடுத்து, கடந்த 13-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநருடன் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு விவகாரம், சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று (அக். 15) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்படுகிறது. எனினும், தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு, அரசியல் சூழல் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x