

பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக் கும் நேற்று நாமக்கல் நீதிமன் றத்தில் 1,318 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல் வழங் கப்பட்டது. மேலும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உட்பட 17 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.
அதில் யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் யுவராஜ், வேலூர் சிறையிலும் மற்ற 6 பேர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். தவிர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்வராஜ், ஜோதிமணி (பெண்), ரவி (எ) ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 10 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் கோகுல்ராஜ் கொலை தொடர்பான 1,318 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, நாமக்கல் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கை நகல், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண் டும்.
அதற்காக கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உட்பட 17 பேரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி எஸ்.மலர்மதி உத்தரவிட்டார். அதன்படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜை, தனி வேன் மூலம் நாமக்கல் நீதிமன்றத்துக்கு நேற்று மதியம் 1.40 மணிக்கு காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
அதுபோல், மற்றொரு வேனில் சேலம் சிறையில் அடைக்கப்பட் டுள்ள 6 பேரும் அழைத்து வரப் பட்டனர். அதையடுத்து அனை வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டனர். தவிர, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 10 பேரும் நீதிமன் றத்தில் ஆஜராகினர். அதையடுத்து அனைவருக்கும் 1,318 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல் அளிக்கப்பட்டது.
எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ்
கொலை செய்யப்பட்ட கோகுல் ராஜ் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எனவே இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. வரும் 17-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என, நீதிபதி எஸ்.மலர்மதி உத்தரவிட்டார்.