Published : 15 Oct 2021 12:05 PM
Last Updated : 15 Oct 2021 12:05 PM

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்ஜிஆர் மாளிகை எனப் பெயர் சூட்டப்படும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை எனப் பெயர் சூட்டப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவரும் இன்று வெளியிட்ட அறிக்கை:

''அதிமுக பொன்விழாவைக்‌ கொண்டாட அதிமுக உடன்பிறப்புகளும்‌, கட்சியின்‌ மீது பேரன்பு கொண்டவர்களும்‌ ஆவலுடன்‌ காத்திருக்கும்‌ இவ்வேளையில்‌, பொன்விழா கொண்டாட்டச் செயல்பாடுகள்‌ குறித்து ஆலோசிக்க, தலைமை நிர்வாகிகள்‌ பங்கேற்ற கூட்டம்‌ நடைபெற்றது.

மண்ணை விட்டு மறைந்தாலும்‌, மக்கள்‌ மனங்களை விட்டு அகலாத புகழ்‌ கொண்ட நிகரில்லா வள்ளல்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. 1972ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ 17ஆம்‌ நாள்‌ “அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌” என்ற மகத்தான இயக்கத்தைத்‌ தொடங்கியபோது ஏற்பட்ட அரசியல்‌ எழுச்சியும்‌, புத்துணர்ச்சியும்‌ இன்றும்‌ தொடர்வது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.

நேற்றும்‌, இன்றும்‌, நாளையும்‌ தமிழ்‌நாட்டின்‌ அசைக்க முடியாத அரசியல்‌ சக்தியும்‌, மக்கள்‌ தொண்டாற்றுவதில்‌ நிகரில்லாததும்‌, அதிமுக‌ மட்டுமே என்பதை வரலாறு எடுத்துரைத்துக்‌ கொண்டே இருக்கிறது. தமிழ்‌நாட்டில்‌ மட்டுமல்லாது, நாடெங்கும்‌ கிடைத்த வரவேற்பைக்‌ கண்டும்‌, தேசிய அளவில்‌ நாம்‌ ஆற்ற வேண்டிய பணிகள்‌ பல இருப்பதை அறிந்தும்‌, புரட்சித்‌ தலைவர்‌ ‌ கட்சிக்கு “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌” என்று பெயர்‌ சூட்டி மகிழ்ந்தார்‌.

அதிமுக‌ தொடங்கப்பட்டதன்‌ 50ஆம்‌ ஆண்டு விழாவைத் தமிழ்‌நாட்டிலும்‌, பிற மாநிலங்களிலும்‌, பின்வரும்‌ வகைகளில்‌ ஆண்டு முழுவதும்‌ கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

அதிமுக‌ பொன்விழா ஆண்டைச் சிறப்பித்திடும்‌ வகையில்‌, பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துதல்‌.

பொன்விழா கொண்டாட்ட சிறப்பு இலச்சினை வெளியிடுதல்‌.

பொன்விழா இலச்சினை பதிக்கப்பட்ட, தங்க முலாம்‌ பூசப்பட்ட பொன்விழாப் பதக்கங்களை அதிமுக முன்னோடிகளுக்கு அணிவித்தல்‌.

தந்‌தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, புரட்சித்‌ தலைவர்‌ எம்‌ஜிஆர்‌, ஜெயலலிதா மற்றும்‌ அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌, அதிமுக இணை
ஒருங்கிணைப்பாளர்‌ ஆகியோரது படங்களுடன்‌, அதிமுகவின்‌ பொன்விழா ஆண்டைக் குறிப்பிடும்‌ வகையிலான லோகோவுடன்‌ ஒரே மாதிரியான பதாகைகள்‌ மற்றும்‌ சுவரொட்டிகள்‌ மாநிலம்‌ முழுவதும்‌ புதுப்‌ பொலிவுடன்‌ அமைத்தல்‌.

அதிமுகவின்‌ பொன்விழா ஆண்டைச் சிறப்பிக்கும்‌ வகையில்‌, அதிமுக மற்றும்‌ சார்பு அமைப்புகளின்‌ சார்பில்‌ ஆங்காங்கே சுவர்‌ விளம்பரங்களும்‌,
இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும்‌ வண்ண விளக்கு அலங்காரங்களும்‌ அமைத்தல்‌.

அதிமுக‌ வளர்ச்சிக்காகத்‌ தொண்டாற்றும்‌ எழுத்தாளர்கள்‌, பேச்சாளர்கள்‌, கவிஞர்கள்‌, கலைத்‌ துறையினர்‌ உள்ளிட்டோருக்கு இந்தப்‌ பொன்விழா ஆண்டு முதல்‌, தந்‌தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, புரட்சித்‌ தலைவர்‌ எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது பெயர்களில்‌ விருதுகள்‌ வழங்கி, கவுரவித்தல்‌.

அதிமுகவின்‌ பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சுப்‌ போட்டி, கவிதைப்‌ போட்டி, கட்டுரைப்‌ போட்டி, விளையாட்டுப்‌ போட்டி ஆகியவற்றை மாநிலம்‌ முழுவதும்‌ நடத்தி, அதில்‌ வெற்றி பெறுபவர்களுக்கு, அதிமுகவின்‌ சார்பில்‌ நடத்தப்படும்‌ பொன்விழா மாநாட்டில்‌ சான்றிதழும்‌, பரிசும்‌ வழங்கி சிறப்பித்தல்‌.

அதிமுக‌ தொடங்கிய நாள்முதல்‌ இன்றுவரை, கழக வரலாற்றின்‌ முக்கிய நிகழ்வுகளை “மக்கள்‌ தொண்டில்‌ மகத்தான 50 ஆண்டுகள்‌” என்ற தலைப்பில்‌ குறிப்பேடாக அச்சடித்து வழங்குதல்‌.

அதிமுக தலைமைக்‌ கழகத்திற்கு “புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மாளிகை” என பெயர்‌ சூட்டல்‌.

தலைமைக்‌ கழகப்‌ பேச்சாளர்கள்‌ மற்றும்‌ கலைக்‌ குழுவினரை கவுரவித்து, உதவி செய்தல்‌.

ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ அரங்கக்‌ கூட்டங்கள்‌ நடத்தி, அந்தந்த மாவட்டத்தில்‌ உள்ள ஆரம்பக்கால உறுப்பினர்களுக்கு பொன்விழா நினைவு நாணயம்‌/ பதக்கம்‌ வழங்குதல்‌. உறுப்பினர்‌ பெயர்‌ விவரம்‌ எழுதப்பட்ட சான்றிதழ்‌ வழங்குதல்‌; பொற்கிழி அளித்தல்‌.

புரட்சித்‌ தலைவரைப்‌ பற்றியும்‌, ஜெயலலிதாவைப்‌ பற்றியும்‌, அதிமுக‌ பற்றியும்‌ நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கவுரவித்தல்‌.

எம்‌ஜிஆர்‌ மன்றங்களில்‌ இருந்து அதிமுக‌ பணிகளைத்‌ தொடங்கிய மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்தல்‌.

அதிமுக‌ பொன்விழாவைப் பொதுமக்களும்‌ அறிந்துகொள்ளும்‌ வகையில்‌, காலச்‌ சுருள்‌ போன்ற வரலாற்று நிகழ்வுகளைக்‌ கொண்ட விளம்பரப்‌ படம்‌
தயாரித்து தொலைக்காட்சிகளிலும்‌, சமூக ஊடகங்களிலும்‌ ஒளிபரப்புதல்‌.

அதிமுக‌ பொன்விழாவை மேலும்‌ சிறப்பித்திடும்‌ வகையில்‌, கட்சி நிர்வாகிகள்‌ தெரிவிக்கும்‌ பல்வேறு ஆலோசனைகளையும்‌ பரிசீலனை செய்து, இந்தப்‌ பொன்விழா ஆண்டில்‌ நிறைவேற்றப்படும்‌.

ஜனநாயகத்திற்கு சாட்சி சொல்லும்‌ திவ்ய தேசமான இந்தியாவில்‌ அரை நூற்றாண்டுகளாக, மக்களின்‌ இதய சிம்மாசனத்தில்‌ நிறையாசனமிட்டு அமர்ந்திருக்கும்‌ இயக்கங்களில்‌ ஒன்றுதான்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌.

வாரிசு அரசியல்‌, மதம்‌ மற்றும்‌ சாதி அரசியல்‌, மனிதர்களைப்‌ பிளவுபடுத்தும்‌ பிற்போக்கு அரசியல்‌ என்ற சிறுமைச்‌ சிந்தனைகள்‌ ஏதும்‌ இன்றி, எல்லோருக்கும்‌ எல்லாமாகத்‌ திகழ, தோற்றுவிக்கப்பட்ட அதிமுக‌ 49 ஆண்டுகளைக்‌ கடந்து பொன்விழா காணும்‌ இவ்வேளையில்‌, 30 ஆண்டுகளுக்கும்‌ மேலாக தமிழ்‌நாட்டின்‌ ஆட்சிப்‌ பொறுப்பில்‌ இருந்து செயற்கரிய சாதனைகளைப்‌ படைத்திருக்கிறது.

அரசியல்‌ இயக்கத்தைத்‌ தொடங்கிவிட்டு மக்கள்‌ செல்வாக்கைத்‌ தேடும்‌ அரசியல்‌ கட்சிகளுக்கு மாறாக, மக்கள்‌ திரண்டு ஓர்‌ அரசியல்‌ இயக்கத்தைத்‌ தொடங்குவதற்கு உத்வேகம்‌ கொடுத்த இயக்கம்‌ என்றால்‌, அது புரட்சித்‌ தலைவரால்‌ தோற்றுவிக்கப்பட்ட அதிமுகவையே சாரும்''‌.

இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x