Published : 15 Oct 2021 07:26 AM
Last Updated : 15 Oct 2021 07:26 AM

இரண்டு மயக்க ஊசிகள் செலுத்தியும் டி.23 புலி தப்பி ஓட்டம்: வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

நீலகிரி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த டி.23 புலியின் மீது இரண்டு மயக்க ஊசி செலுத்திய நிலையிலும் புலி தப்பி ஓடியது.

தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும் போது அந்த புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்று 13 வயதுடையை இந்த T23 புலி. அந்தப் புலி மசினக்குடியில் கெளரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு அடித்து கொன்றது.

பின்னர் அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்துக் கொன்றது.

இதைத் தவிர அப்பகுதியில் 30-கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இதற்கிடையில் ஆட்கொல்லி புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்துக்கொண்டிருந்த பசுவன் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்து கொன்றது.

புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் புலியை சுட்டுக்கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

அதனையடுத்து, அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து போரடி வருகின்றனர். அதனையடுத்து, அந்தப் புலி வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்தது.

நீண்ட தேடுதலுக்கு பின்னர் முதுமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட ஒம்பெட்டா வனப்பகுதியில் கண்டறியப்பட்டது. இதனால், கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் மீண்டும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். நேற்று இரவு புலிக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கிச் சென்றது.

இந்நிலையில், மசினகுடி அருகே புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதனால், இன்று புலியை வனத்துறையினர் பிடித்து விடுவார்கள் எனத் தெரிகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ' நேற்று இரவு டி.23 புலி தெப்பக்காடு-மசனகுடி சாலையில் வருவதாக தகவல் வந்தது. உடனடியாக மருத்துவ குழு மற்றும் தேடுதல் குழு அந்த இடத்துக்கு சென்று புலியை கண்காணிக்கப்பட்டது. புலி சாலை ஓரத்தில் வருவதும், மீண்டும் புதருக்குள் செல்வதுமாய் இருந்தது. இரவு முழுவதும் அந்தப் புலி கண்காணிக்கப்பட்டது. தற்போது புலி மசனகுடி பகுதி, கூல் பிரீஸ் ரிசார்ட் அருகிலிருக்கும் வனப்பகுதிக்கு வந்துள்ளதாக தெரிந்தது.

உடனடியாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, இன்று யாரும் அந்தப் பகுதிக்கு மாடு மேய்க்கவோ மற்றும் வனத்துக்குள் செல்லவோ கூடாது என்று அறிவிக்க செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. வனப் பணியாளர்களும் அந்த பகுதியில் யாரும் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் டி23 புலியை அந்த இடத்தில் தேடும் பணி மேற்கொள்ளப்படும்’ எனறனர்.

இதற்கிடையில் இரவு 10 மணிக்கு மேல் புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதற்கு விலங்கின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளின் படி மாலை 6 மணிக்கு மேல் மயக்க ஊசி செலுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும்போது இரவு 10 மணிக்கு ஏன் மயக்க ஊசி செலுத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x