வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று சராசரியாக 1,300-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கரோனா பரவல் குறைந்திருந்தாலும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அத்தியாவசியத் தொழில்கள், பொழுதுபோக்கு சார்ந்த பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இத்தடையைத் தளர்த்தக் கோரி அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. வார இறுதி நாட்களில் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என, உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து நேற்று (அக். 13) முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், பல்வேறு தளர்வுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 14) வெளியிட்ட உத்தரவில், "அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in