Last Updated : 14 Oct, 2021 12:45 PM

 

Published : 14 Oct 2021 12:45 PM
Last Updated : 14 Oct 2021 12:45 PM

கோவை கைத்தறி துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்

கோவையிலுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று இரவு முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சாயிபாபா காலனி அருகேயுள்ள பாரதிபார்க் 2-வது வீதியில், தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று (அக். 13) இரவு திடீர் சோதனைக்கு வந்தனர். கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், போலீஸார் என 7-க்கும் மேற்பட்டோர் இக்குழுவில் இருந்தனர்.

அலுவலகத்தில் நுழைந்தவுடன் அங்கிருந்தவர்களின் செல்போன்களை வாங்கி ஸ்விட்ச் ஆஃப் செய்தனர். அலுவலக தொலைபேசி இணைப்புகளை தற்காலிகமாக துண்டித்தனர். அங்கு இருந்த பொதுமக்களை வெளியே அனுப்பினர். அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் இருந்தனர். அலுவலக கதவுகளை மூடிவிட்டு, அங்கிருந்த ஒவ்வொரு அறையாக போலீஸார் சோதனை செய்தனர்.

உதவி இயக்குநர் அறை, கண்காணிப்பாளர் அறை, ஊழியர்கள் உள்ள இடம், அலுவலக மேஜைகள், உணவருந்தும் இடங்கள், கோப்புகள் பராமரிக்கும் அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x