Published : 24 Mar 2016 07:06 AM
Last Updated : 24 Mar 2016 07:06 AM

வேலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

வேலூரில் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணா மலை (47). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 21-ம் தேதி மாலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட அண்ணாமலைக்கு நேற்று முன்தினம் இரவு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அண்ணாமலையின் உடல் உறுப்பு களை தானம் செய்ய அவரது குடும்பத்தார் முன்வந்தனர்.

அதன்படி, சென்னையில் உள்ள மலர் மருத்துவமனைக்கு இதயமும், குளோபல் மருத்துவ மனைக்கு நுரையீரலும், சென்னை அப்போலா மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகமும் சாலை மார்க்கமாக பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. 2 கண்கள், கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த அண்ணாமலைக்கு கவிதா (42) என்ற மனைவியும், ஜான்சன் (17) என்ற மகனும், ஜாய்ஸ் ஜபக்குமாரி (9) என்ற மகளும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x