Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

ஆயுத பூஜைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள்: 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று திரண்ட பயணிகள். படம்: ம.பிரபு

சென்னை

தமிழகத்தில் ஆயுத பூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், வெள்ளி ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டால் சனி, ஞாயிறு எனதொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் ஆயுத பூஜையைசொந்த ஊரில் கொண்டாடு வதற்காக சென்னையில் இருந்து நேற்று மதியம் முதல் ஏராளமான மக்கள் புறப்பட்டு சென்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலைக்குப் பிறகு கூட்டம் குவிந்ததால், ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆயுதபூஜை பண்டிகையையொட்டி நேற்று மதியத்துக்கு பிறகு சென்னையில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பயணிகள் கூட்டத்துக்கு ஏற்றார் போல், நள்ளிரவு வரையில் சிறப்பு பேருந்துகளை வரிசைப்படுத்தி இயக்கினோம். சென்னையில் இருந்து இயக்கப்படும் 2000 பேருந்துகளோடு 600 சிறப்பு பேருந்துகளை இயக்கினோம். மேலும், பண்டிகை முடிந்த பிறகும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x