Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

எம்.கே.பி நகரில் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை: கடன் பிரச்சினை காரணமா என போலீஸார் விசாரணை

சென்னை

எம்.கே.பி நகரில் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வியாசர்பாடி எம்கேபி நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ் சந்த் (55). இவர் இதே பகுதியில் ஜவுளிக் கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். ஹரிஷ் சந்துக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது.

கரோனாவின் தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக ஹரிஷ் சந்துக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் கடன் பிரச்சினையில் சிக்கி வந்தார். இந்நிலையில் இரண்டாவது மகளுக்கு அண்மையில் திருமணத்தை உறுதி செய்துள்ளார். கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வந்த ஹரிஷ் சந்த், மகளின் திருமணத்துக்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனது அறையில் தனியாக இருந்தபோது, கத்தியால் தனது கழுத்தை அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அங்கு விரைந்தனர். தொடர்ந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிஷ் சந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஹரிஷ் சந்த் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்தாரா அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என எம்கேபி நகர் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x