

தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை ஏற்றம் அடைந்தது. சரஸ்வதி தேவிக்கு உகந்த தாமரைப்பூ ஒன்று ரூ.20 வரை விற்பனை ஆனது. கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சந்தை களைகட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சந்தையான தோவாளை மலர் சந்தையில் கரோனா ஊரடங்கிற்கு பின்னர் பூக்கள் விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது. நடந்து முடிந்த ஓணம் பண்டிகையின்போது கடந்த ஆண்டைவிட விற்பனை அதிகமாக இருந்ததால் மலர் விவசாயிகள், பூ வியபாரிகள் ஓரளவு வாழ்வாதாரம் பெற்றனர். அதன் பின்னரும் வெளியூர்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பூக்கள் தேக்கமடைந்து வந்தன.
இந்நிலையில் நவராத்திரி பூஜைகளுக்காக கடந்த ஒரு வாரமாக தோவாளை மலர் சந்தையில் ஓரளவு பூக்கள் விற்பனை ஆனது. அதே நேரம் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை.
ஆனால் ஆயுதபூஜையை முன்னிட்டு மதுரை, சந்தியமங்கலம், பெங்களூரு, சேலம் பகுதிகளில் இருந்து வழக்கத்தைவிட 100 டன்களுக்கு மேல் பூக்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்திருந்தனர்.
குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு தடை விதித்திருந்தாலும் வீடுகளில் பூஜை செய்வதற்காக அதிகமான மக்கள் இன்று அதிகாலையில் இருந்தே வந்து பூக்களை கொள்முதல் செய்தனர். இதனால் தோவாளை மலர் சந்தை களைகட்டியது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.850க்கும், பிச்சிப்பூ 1,250க்கும் விற்பனை ஆனது. கிரேந்தி ரூ.100, வாடாமல்லி ரூ.180க்கு விற்பனை ஆனது. சரஸ்வதி பூஜைக்கு உகந்த தாமரை பூ ஒன்று ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை ஆனது.
வியாபாரிகள் பூக்கள் விற்பனை ஆகுமா? என்ற கவலையுடன் இருந்த நிலையில் ஊரடங்கிற்கு மத்தியில் தோவாளை மலர் சந்தையில் உள்ளூர் ஆயுத பூஜை தேவைகளுக்கு பூக்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றதால் மகிழ்ச்சி அடைந்தனர்.