முறையாக வகைப்படுத்தி, தணிக்கை செய்யாமல் கோயில் நகைகளை உருக்க அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் வாதம்; விசாரணை தள்ளி வைப்பு

முறையாக வகைப்படுத்தி, தணிக்கை செய்யாமல் கோயில் நகைகளை உருக்க அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் வாதம்; விசாரணை தள்ளி வைப்பு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் சுமார் 500 கிலோ கோயில் நகைகள் கடந்த 1977 முதல் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக கோயில் நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘கோயில்களில் உள்ள நகைகளின் இருப்பு குறித்த விவரங்கள், பதிவேடுகள் இல்லை என்பதால் அவற்றை உருக்க தடை விதிக்க வேண்டும். கோயில்களில் உள்ள பழமையான, புராதனமான நகைகள் எவை என்பது குறித்தும். கோயில்களில் கடவுள்களுக்கு அணிவிக்கப்படும் நகைகள் எவை என்பது குறித்தும் கண்டறிய வேண்டும். தமிழகத்தில் உள்ள சுமார் 38 ஆயிரம் கோயில்களில் உள்ள 2,137 கிலோ தங்கத்தை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே, நகைகளை வகைப்படுத்தி தணிக்கை செய்யாமல் அவற்றை உருக்க அனுமதிக்கக் கூடாது’’ என வாதிடப்பட்டது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நகைகள் கடந்த 1977-ம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 5 லட்சம் கிராம் (500கிலோ) தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.11 கோடி வட்டி வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது. கோயில் நகைகளை தணிக்கை செய்ய ஏற்கெனவே உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் 2 பேரும் நியமிக்கப்பட்டு கடந்த செப்.9-ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது’’ எனக் கூறி அதை தாக்கல் செய்தார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை அக்.21-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in