Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கட்டுமான உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் சங்கபிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, எழிலன்நாகநாதன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சிறப்பு அலுவலர் வடிவேலு, இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், கட்டுமான சங்க தலைவர் சாந்தகுமார், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக ஏற்படும் கொசு பெருக்கத்தால் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல்பாதிப்பு சிறிதளவில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு பன்முக தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து துறைகளாலும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 3,090 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பானவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்பொழுது தமிழகத்தில் 362 நபர்கள் மட்டுமே டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (நேற்று) நடைபெற்றஇக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு டெங்குகாய்ச்சல் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் பற்றியும், டெங்குகாய்ச்சல் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டுமான பணி உரிமையாளர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் அதனைச் சார்ந்தபகுதிகளில் தேவையற்ற நீர் தேக்கங்களை தவிர்க்க வேண்டும்.மழைக்காலங்களில் குடிநீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரைப் பருக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x