Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுக்கும் பணி, கொடுங்கையூரில் கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணி ஆகியவற்றை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
சென்னையை மாசு இல்லாத நகரமாகப் பராமரிக்கவும், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் நீண்ட நாட்களாகத் தேங்கியுள்ள குப்பையை அகற்றி நிலத்தை மீட்கவும், உர மையங்களை வலுப்படுத்தி திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தவும், கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்யவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பைகளை ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு இருவரும் கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டிட மற்றும் இடிபாடு கழிவுகளை கல் மற்றும் மண்ணாகப் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யம் இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர்.
அத்துடன், ராயபுரம் மண்டலம், வார்டு 54-ல் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கழிவுகள் மற்றும் தேங்காய் குடுவைகளை மறுசுழற்சி செய்யும் மையத்தை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT