நிரம்பியது பில்லூர் அணை; 8 ஆயிரம் கனஅடி  நீர் திறப்பு

நிரம்பியது பில்லூர் அணை; 8 ஆயிரம் கனஅடி  நீர் திறப்பு
Updated on
1 min read

கோவை மேட்டுப்பாளையம் பில்லூர் அணை தொடர் மழையால் இன்று (12-ம் தேதி) நிரம்பியது. அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து, இன்று மதியம் பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதாவது, அணையின் மொத்த நீர்தேக்க உயரம் 100 அடி ஆகும். பாதுகாப்பு கருதி 97.5 அடி வரைக்கும் மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. இன்று மதியம் நிலவரப்படி பில்லூர் அணையில் நீர்மட்டம் 97.5 அடியை கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்தது மற்றும் தற்போது அணைக்கு, விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து வந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மதியம் 4 மதகுகள் வழியாக பில்லூர் அணையில் இருந்து, விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.

அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றின் வேகம் அதிகரித்து, வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் பவானியாற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினரும் கரைப் பகுதிகளில் பாதுகாப்பு உபகரணங்களுடன் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in