Last Updated : 12 Oct, 2021 02:26 PM

 

Published : 12 Oct 2021 02:26 PM
Last Updated : 12 Oct 2021 02:26 PM

மே 1 அரசு விடுமுறையை ரத்து செய்த புதுச்சேரி அரசு?- மத்திய அரசிடம் புகார்

புதுச்சேரி

நாடு முழுவதும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் மே 1 அரசு விடுமுறையை 2022-ம் ஆண்டுக்கான பட்டியலில் இருந்து புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி நடவடிக்கை கோரி மத்திய உள்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலைப் புதுச்சேரி அரசு வெளியிடும். இச்சூழலில் 2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் உள்ள குறையைச் சுட்டிக்காட்டியும், சரிசெய்யக் கோரியும் மத்திய உள்துறைச் செயலர், ஆளுநர் ஆகியோருக்கு புதுவை ஏஐயூடியூசி செயலாளர் சிவக்குமார் மனு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களைப் புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி விடுமுறை அளிக்கவில்லை. புதுவை அரசின் இச்செயலைத் தொழிற்சங்கத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1-ம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதுவை அரசு 2022-ம் ஆண்டு விடுமுறை தினப் பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அன்று விடுமுறை அளிக்காதது தொழிலாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதற்குச் சான்றாகும். எனவே முந்தைய ஆண்டுகளைப் போல 2022-ம் ஆண்டிலும் மே 1-ம் தேதி தொழிலாளர் தின விடுமுறையை அறிவிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறைச் செயலர், ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x