Published : 12 Oct 2021 01:05 PM
Last Updated : 12 Oct 2021 01:05 PM

விஜயதசமி அன்று கோயில்களைத் திறக்க வாய்ப்புள்ளதா? - தமிழக அரசு இன்று பிற்பகல் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

விஜயதசமி நாளன்று (வெள்ளிக்கிழமை) கோயில்களைத் திறக்க வாய்ப்புள்ளதா என, அரசின் கருத்தைப் பெற்று இன்று பிற்பகலில் தெரிவிக்குமாறு, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அமல்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி, அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் கோயில்களைத் திறக்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏற்கெனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தரிசனத்துக்காகக் கோயில்களைத் திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பட்டியலில் வராததால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விஜயதசமியன்று மட்டும் கோயிலைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையிட்டார்.

அப்போது ஆஜராகியிருந்த அரசு தலைமை வழக்கறிஞர், மத்திய அரசினுடைய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் கோயில் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, அரசின் கருத்தை அறிந்து பிற்பகலில் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிற்பகல் 1.30 மணிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x