Published : 20 Mar 2016 10:01 AM
Last Updated : 20 Mar 2016 10:01 AM

சொந்த விருப்பத்தின் பேரில் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் மாறுதல்

தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஆந்திரா-தெலங்கானா மாநிலங்களுக்கென உள்ள ஹைதராபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்கிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றுபவர் வி.ராமசுப்பிரமணியன். இவர், கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதிமுதல் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிளுக்கான சீனியாரிட்டி வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார்.

இவர் ஏராளமான வழக்குகளை விசாரித்து பரபரப்பு உத்தரவுகளை பிறப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வாகன ஓட்டுநர்களின் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவில் இருந்த தவறுகளை துணிச்சலாக திருத்தியதோடு, தவறான தீர்ப்பு கூறிவிட்டால் அதை திருத்திக்கொள்ளும் தைரியம் இந்த உயர் நீதிமன்றத்துக்கு உண்டு என வெளிப்படையாக தீர்ப்பு கூறியவர்.

இவர் தற்போது தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கென ஹைதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விரைவில் அங்கு அவர் 3-வது மூத்த நீதிபதியாக பதவி ஏற்கவுள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x