Published : 11 Oct 2021 06:25 PM
Last Updated : 11 Oct 2021 06:25 PM

அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என, தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (அக்.11) வெளியிட்ட அறிக்கை:

"புதுக்கோட்டை மாவட்டம், குரும்பிவயல் கிராமத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லைக் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு இல்லாத காரணத்தால், விவசாயிகள் சேர்த்த வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் அழிந்து நாசமாகியுள்ளன.

கண் எதிரிலேயே நெல் மூட்டைகள் அழிந்து நஷ்டமும் நாசமும் ஏற்பட்டதைப் பொறுக்க முடியாத விவசாயிகளது கோரிக்கைகளுக்கு உடனடியான தீர்வு காண நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே, விவசாயிகள் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ள செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லைத் தமிழக அரசு கொள்முதல் செய்ய மறுப்பதும், இதனால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து பெரும் நஷ்டம் ஏற்படுவதும் தொடர் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இதனால் பல லட்சம் மூட்டை நெல் நாசமாகி விவசாயிகள் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளானார்கள்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுவரும் நெல் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்னரும், பழைய நிலையிலேயே நெல் கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்திருப்பது உணவுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

உடனடியாகத் தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, விவசாயிகள் உற்பத்தி செய்துள்ள முழு அளவு நெல்லையும் தங்கு தடையில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யாமல் மழையினால் நெல் மூட்டைகள் நனைந்தாலும் அதற்கு அரசு பொறுப்பேற்று அந்த நெல்லையும் முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.

விவசாயிகளது நெல்லைக் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பது, கொள்முதல் செய்வதற்கு கமிஷன் வசூலிப்பது போன்றவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக அரசும், அதிகாரிகளும் அனைத்துப் பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதற்கும், விவசாயிகள் இடையூறு இல்லாமல் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x