Published : 11 Oct 2021 06:00 PM
Last Updated : 11 Oct 2021 06:00 PM

கொடைக்கானல் நீர்வீழ்ச்சியில் குளித்த சுற்றுலாப் பயணி மாயம்: தேடும் பணியில் தீயணைப்புத் துறை 

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஓராவி அருவியில் மாயமான இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர். 

கொடைக்கானல் 

கொடைக்கானல் மலைப்பகுதி ஓராவி அருவியில் குளித்த சுற்றுலாப் பயணி மாயமானதை அடுத்து அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பேத்துப்பாறையை அடுத்துள்ள பாரதி அண்ணாநகர் பகுதியில் ஓராவி அருவி உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து சுற்றுலா வந்த சிலர் இன்று காலையில் ஓராவி அருவிப் பகுதிக்குச் சென்று குளித்துள்ளனர். மேல்மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அருவியில் நீர் அதிக அளவில் கொட்டுகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணி அருண் (25) குளித்துக் கொண்டிருந்தபோது மாயமாகியுள்ளார். அனைவரும் குளித்துவிட்டுக் கரையேறியபோது அருண் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து உடன் சென்றவர்கள் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

நீரில் மாயமாகிய அருணைத் தேடும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் மீட்புப் பணியை நேரில் ஆய்வு செய்தார். மாயமான இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இதேபோல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஓராவி அருவியில் குளித்த சுற்றுலாப் பயணி ஒருவரை இறந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

பாதுகாப்பற்ற பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x