நீதிமன்றத்தில் சரணடைந்தது ஏன்?- கடலூர் எம்.பி. ரமேஷ் விளக்கம்

நீதிமன்றத்தில் சரணடைந்தது ஏன்?- கடலூர் எம்.பி. ரமேஷ் விளக்கம்
Updated on
1 min read

என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதைச் சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபிப்பேன் என்று கடலூர் எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கடலூர் எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

''என்னுடைய முந்திரித் தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராசு என்பவரது மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து திமுக மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும் இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது.

ஆகவே, நான் உயிரினும் போற்றும் என் தலைவர் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி சி.பி.சி.ஐ.டி பதிவு செய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்”.

இவ்வாறு கடலூர் எம்.பி. ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

கடலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 19-ம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது இறப்புக்கு கடலூர் எம்.பி. ரமேஷ்தான் காரணம் எனக் கூறி கோவிந்தராசுவின் உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ரமேஷ் தவிர 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதனால், எம்.பி.ரமேஷும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள எம்.பி., ரமேஷிடம் சிபிசிஐடிபிரிவின் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. சிபிசிஐடி போலீஸாரின் ஒரு பிரிவினர் ரமேஷிடம் தனியாக விசாரணை நடத்திவந்த நிலையில், இன்று அவர் பண்ருட்டி சார்பு நீதிமன்ற நீதிமன்ற நடுவர் கற்பகவள்ளி முன்பு சரணடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in