Last Updated : 11 Oct, 2021 12:18 PM

 

Published : 11 Oct 2021 12:18 PM
Last Updated : 11 Oct 2021 12:18 PM

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் எம்.பி. பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரண்

கடலூர் எம்.பி.யும், முந்திரி ஆலை உரிமையாளருமான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்குத் தொடர்பாக பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

கடலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 19-ம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது இறப்புக்கு கடலூர் எம்.பி. ரமேஷ்தான் காரணம் எனக் கூறி கோவிந்தராசுவின் உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ரமேஷ் தவிர 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதனால், எம்.பி.ரமேஷும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள எம்.பி., ரமேஷிடம் சிபிசிஐடிபிரிவின் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. சிபிசிஐடி போலீஸாரின் ஒரு பிரிவினர் ரமேஷிடம் தனியாக விசாரணை நடத்திவந்த நிலையில், இன்று அவர் பண்ருட்டி சார்பு நீதிமன்ற நீதிமன்ற நடுவர் கற்பகவள்ளி முன்பு சரணடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x