Published : 10 Oct 2021 08:00 PM
Last Updated : 10 Oct 2021 08:00 PM

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி; தமிழகம் முன்னணியில் இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

கரூர்

18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையில் உள்ளது. பரீட்சார்த்த முறையில் செலுத்தும் பணி தொடங்கினால் அதனை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் இருக்கும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கரூர் நகராட்சி செல்லாண்டிபாளையத்தில் மக்களை தேடி மருத்தும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 10ம் தேதி) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் அளிக்கப்படுவதை பார்வையிட்டு பயனாளிகளுக்கு இரு மாதங்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் இன்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாலை 6 மணி நிலவரப்படி 19.98 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 22 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இன்றைக்கு 20 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதால் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சதவீதம் மேலும் 2 சதவீதம் உயரும். 70 சதவீதத்திற்கு மேலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலே கரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது.

இன்றைக்கு 1,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பரிசோதனையில் 0.80 சதவீதமாகும்.

கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் 8,53,600 பேர். இதில் 6,22,921 பேர் என 73 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கரூர் உள்ளது.

18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையில் உள்ளது. பரீட்சார்த்த முறையில் செலுத்தும் பணி தொடங்கினால் அதனை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் இருக்கும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 18,87,703 பேர் பயனடைந்துள்ளனர் என்றார்.

மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்,எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி ஆர்.இளங்கோ, குளித்தலை மாணிக்கம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x