Last Updated : 10 Oct, 2021 07:13 PM

 

Published : 10 Oct 2021 07:13 PM
Last Updated : 10 Oct 2021 07:13 PM

ஒரேயொரு அதிகாரியைக் கொண்டு பெயரளவில் செயல்படும் புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை

உணவு பாதுகாப்புத்துறை வளாகம்

புதுச்சேரி

புதுச்சேரியில் ஒரேயொரு அதிகாரியை கொண்டு பெயரளவில் மட்டுமே உணவு பாதுகாப்புத் துறை செயல்படுகிறது. பத்து ஆண்டுகளில் 13 வழக்குகள் மட்டுமே போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் உணவகங்கள், தேநீர் கடைகள், பார் உணவகங்கள் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலையிழந்த பலரும் உணவகத் தொழிலை தொடங்கியுள்ளனர். பல இடங்களில் உணவு பாதுகாப்பு கண்டுகொள்ளப்படுவதில்லை.

புதுச்சேரியில் உணவு பாதுகாப்புத்துறை செயல்பாடு தொடர்பாக ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டு பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக ரகுபதி கூறியதாவது:

புதுச்சேரியில் உணவு பாதுகாப்புத்துறை என்பது ஒன்று உள்ளதா என்கிற வகையில் செயல்பாடின்றி இயங்கி வருவதை அறிந்து, இதன் விபரங்களை இந்திய தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல்களாக கேட்டோம். அதில் பல தகவல்கள் கிடைத்தனர். குறிப்பாக உணவு பாதுகாப்புத்துறை கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 2011-ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளில் 628 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இவற்றில் 13 வழக்குகள் மட்டுமே காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாவும் கூறியுள்ளனர்.

உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், உடனடியாக உணவின் தரங்களை ஆய்வு
மேற்கொள்ளும் வகையிலும் வாங்கப்பட்ட, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திலேயே காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதி கொண்ட வாகனம்.

இதுமட்டுமின்றி இந்தத் துறையில் ஒரேயொரு அதிகாரி மட்டும் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளனர். 10 ஆண்டுகளில் 13 வழக்குகளை மட்டுமே காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியதன் மூலம் இந்த துறை பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது என தெரிகிறது.

புதுச்சேரியில் தற்பொழுது நட்சத்திர அந்தஸ்து உணவு விடுதிகள் முதற்கொண்டு, சாலையோர உணவகங்கள், துரித உணவகங்கள் ஆகியவை புற்றீசல் பெருகி வரும் நிலையில், இங்கு தயாராகும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய இவர்கள் 10 ஆண்டுகளில் வெறும் 628 ஆய்வுகள் தான் மேற்கொண்டுள்ளனர். உணவு பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து உணவகங்களின் உணவு தரங்களை ஆய்வு செய்து, மக்கள் நலகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர், முதல்வருக்கு கோரிக்கை மனு வைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

நிரப்ப வேண்டிய பெரும்பாலான காலிப் பணியிடங்கள்

புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வந்த உணவு பாதுகாப்பு பிரிவு தற்போது தனித்துறையாக செயல்படுகிறது. உணவு பாதுகாப்பு பிரிவில் பெரும்பாலான இடங்கள் காலியாகவேு உள்ளன. உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் தரத்தை சோதனை செய்து தரமற்ற உணவு பொருட்கள் தயாரித்து மக்கள் உயிரோடு விளையாடும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிரம காரியம்.

சுகாதாரத்துறையில் நீண்டகாலமாக பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்களை உணவு பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு நிரப்பலாம். இதுவரை பலமுறை அரசு செயலருக்கு கோரிக்கை வைத்தும் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அண்டை மாநிலங்களாக தமிழ்நாடு, கர்நாடகாவில் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்களுக்கு பயிற்சி தந்து பணியில் ஈடுபடுத்துகிறார்கள்."

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x