Published : 10 Oct 2021 04:26 PM
Last Updated : 10 Oct 2021 04:26 PM

தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் அருளானந்தம் மறைவு: பாம்பனில் நாளை உடல் அடக்கம்

அருளானந்தம்

ராமேசுவரம்

தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் அருளானந்தம் (75) பாம்பனில் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவரது உடல் பாம்பனில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

ராமேசுவரம் அருகே பாம்பனைச் சார்ந்தவர் அருளானந்தம் (75). இவர் தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவராகவும், இந்திய-இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான பணியாற்றினார்.

1980களில் இலங்கை உள்நாட்டு போர் தொடங்கிய போது இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த துவங்கியதிலிருந்து மீனவர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கினார். கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்தி உள்ளார்.

தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களது விசைப் படகுகள் சிறைப்பிடிக்கபடும் போது தமிழக அரசு சார்பாக இலங்கயில் வழக்காடி மீட்கும் பணிகளை திறம்பட செய்தவர்.

இந்திய- இலங்கை அரசுகளின் சார்பாக சென்னை, டில்லி, கொழும்புவில் நடைபெற்ற மீனவப் பேச்சு வார்த்தைகளின் போது மீனவர்களின் பிரதிநிதியாகவும் பங்காற்றிய உள்ளார். தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் இலங்கை மீனவர்களின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு அம்மீனவர்களையும் விடுதலைக்கும் பாடுபட்டுள்ளார்.

ராமேசுவரம் மீனவர்களால் தீவுக்கவி என்று அன்போடு அழைக்கப்படும் அருளானந்தம் சிறந்த கவிஞரும் கூட. இவரது அருளானந்தம் இயக்கத்தில் உப்புக் காற்றும் உசுரும் எனும் இசைக் குறுந்தகடு 2017ம் ஆண்டு தங்கச்சிமடத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பாம்பனில் அவரது இல்லத்தில் அருளானந்தம் காலமானார். பாம்பனில் ஞாயிற்றுக்கிழமை அவரது உடலுக்கு பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் மற்றும் மீனவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர். பாம்பனில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x