திருப்பதி பிரம்மோற்சவத்தில் பெருமாள் அணிவதற்காக ஆண்டாள் சூடிக் களைந்த மாலை அனுப்பிவைப்பு

சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்.
சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்.
Updated on
1 min read

திருப்பதியில் நடைபெறும் பிரம் மோற்சவத்தில் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலை அனுப்பி வைக்கப்பட்டது

திருப்பதியில் தற்போது பிரம்மோற்சவத் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவின் 5-ம் நாள் கருட சேவையின்போது வெங்கடேசப் பெருமாள் அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் களைந்தமாலை, வஸ்திரம், கிளி ஆகிய மங்கலப் பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முன்னதாக ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. சுமார் 7 அடி நீளம் உள்ள பல வண்ண மலர்களால் கட்டப்பட்ட மாலை, பட்டுப் பரிவட்டம், கிளிஆகியவை ஆண்டாளுக்கு சூட்டப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மாலைகள், கிளி, வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மாடவீதி வழியே ஊர்வலமாகக் கொண்டு வந்து பின்னர் கார் மூலம் திருப்பதி கொண்டு செல்லப்பட்டன. அங்கு பெரிய ஜீயர் மடத்தில் மங்கலப் பொருட்கள் திருமலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், மதுரை மண்டல அறநிலையத் துறை இணை ஆணையர் குமரதுரை, செயல் அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in