Published : 10 Oct 2021 03:17 AM
Last Updated : 10 Oct 2021 03:17 AM

ஆட்கள் பற்றாக்குறை, கூடுதல் பணிமனைகள் இல்லை; மாநகர பேருந்துகளை சீராக இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?- புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை, கூடுதல் பணிமனைகள் இல்லாததால் பேருந்துகளை சீராக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் 842 தடங்களில் தினமும் இயக்கப்படும் 3,000-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த பேருந்துகளை பராமரிக்க சென்னையில் பல்வேறு இடங்களில் மொத்தம் 33 பணிமனைகள் உள்ளன. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பேருந்துகளின் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இரவு 9 மணிக்கு மேல் பெரும்பாலான இடங்களுக்கு மாநகர பேருந்துகளின் சேவை இல்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மக்கள்இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், பல்வேறு வழித்தடங்களில் மாநகர பேருந்துகளின் சேவை போதிய அளவில் இல்லை. இரவு 9 மணிக்கே பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. குறிப்பாக, சோழிங்கநல்லூர், குன்றத்தூர், பெரும்புதூர், கேளம்பாக்கம், பொன்னேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு 7 மணிக்குப் பிறகு நேரடி மாநகர பேருந்துகளின் சேவை இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மாநகர பேருந்துகளை சீராக இயக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக பேருந்து நடத்துநர்கள் சிலர் கூறும்போது, ‘‘திருவள்ளூர், செங்கல்பட்டு, மகாபலிபுரம், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த பேருந்துகள் வந்து சேர வேண்டிய பணிமனைகள் சென்னையில் இருக்கின்றன. இதனால், இரவு 7 மணிக்குப் பிறகு மாநகர பேருந்துகளை சீராக இயக்குவதில் சிக்கல் இருக்கிறது. புறநகர் பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், போதிய இடங்களை தேர்வு செய்து புதியபணிமனைகளை மாநகர போக்குவரத்து கழகம் அமைக்க முன்வர வேண்டும்’’ என்றனர்.

மாநில அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்க (எஸ்விஎஸ் - ஏஏபி) மாநில தலைவர் ஆர்.எம்.சுவாமி கூறும்போது, “சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். தற்போது, 21 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால், மக்களுக்கு முழுமையான பேருந்து சேவை அளிப்பதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது.

கரோனா பாதிப்பின்போது பயணிகள் வருகை அதிகளவில் இல்லை. பேருந்துகளின் சேவையும் குறைவாக இருந்ததால், இதன்பாதிப்பு இல்லாமல் இருந்தது.ஆனால், தற்போது கரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிகளவில் வெளியேவரத் தொடங்கிவிட்டனர். அரசு போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x