Published : 10 Oct 2021 03:17 AM
Last Updated : 10 Oct 2021 03:17 AM

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி திருவள்ளூர் கோலப்பன்சேரியில் ‘சங்கல்ப்’ சிறப்பு குழந்தைகள் பள்ளி- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் கோலப்பன்சேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘சங்கல்ப்’ சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் கோலப்பன்சேரியில் அமைக்கப்பட்டுள்ள ‘சங்கல்ப்’ சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை, சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ‘சங்கல்ப்’ பள்ளி 20 ஆண்டுகளாக சிறப்பு குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், இப்புதிய ‘சங்கல்ப்’ பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பள்ளியில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை, பேச்சுப்பயிற்சி சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், அக்குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்தும் வகையில் தொழிற்கல்வி பயிற்சி மூலம் நகை தயாரிப்பு, பரிசுப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், டேட்டா என்ட்ரி, சோப்பு தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, முகக்கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில், ‘சங்கல்ப்’ பள்ளியை சிறப்பான முறையில் நடத்தி வருவதற்கு அப்பள்ளி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். நிகழ்வில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ‘சங்கல்ப்’ நிறுவன அறங்காவலர் முல்லாசரி அஜித் சங்கர்தாஸ், இயக்குநர்கள் சுபாஷினி ராவ், லட்சுமி கிருஷ்ணகுமார், சுலதா அஜித் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x