Published : 10 Oct 2021 03:18 AM
Last Updated : 10 Oct 2021 03:18 AM

மதுரையில் ஏ.சி. வெடித்ததில் ஒரே வீட்டில் இருவர் உயிரிழப்பு

மதுரை ஆனையூரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அறையிலிருந்த ஏ.சி. வெடித்து தீப்பற்றியதில் இருவர் உயிரிழந்தனர்.

ஆனையூர் எஸ்விபி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த தங்கப்பன் மகன் சக்தி கண்ணன் (42). இவர் விளாங்குடியில் ஆர்கானிக் சோப் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி, இவரை விட்டுப் பிரிந்து சென்று குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார்.

இந்நிலையில், சக்தி கண்ணனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுபா (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சக்திகண்ணன், சுபா, அவரது 17 வயது மகள், 14 வயது மகன் ஆகிய அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிலிருந்த ஏ.சி வெடித்து தீப்பிடித்ததில் சக்தி கண்ணன், சுபா ஆகியோர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மனைவியைப் பிரிந்த சக்தி கண்ணனும், கணவரைப் பிரிந்த சுபாவும் கணவன், மனைவி போல ஆனையூர் எஸ்விபி நகரில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

அவர்களோடு சுபாவின் மகன், மகளும் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சக்தி கண்ணன் கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு விட்டு இரவில் தூங்கச் சென்றனர். சக்தி கண்ணன், சுபா ஆகியோர் மாடியிலும், மகன், மகள் தரைதளத்திலும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

கொலுவில் வைத்திருந்த விளக்கை அணைக்காமல் இருந்ததால் நள்ளிரவில் தீப்பற்றி படுக்கை அறையில் பரவியது. இதில் ஏசி வெடித்ததில் புகை மண்டலம் சூழ்ந்தது. புகையால் இருவரும் மயக்கம் அடைந்ததால் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்து பார்த்தபோது இருவரும் இறந்தது தெரிய வந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கூடல்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x