Published : 09 Oct 2021 08:18 PM
Last Updated : 09 Oct 2021 08:18 PM

மாணவர்களை வரவேற்க நில வரைபடங்களால் வகுப்பறை தயார்: அரசுப் பள்ளி ஆசிரியரின் அழகிய முயற்சி

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கு வரவுள்ள மாணவர்களை வரவேற்க நில வரைபடங்களால் வகுப்பறையைத் தயார் செய்து வைத்துள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்.

நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஒன்றரை ஆண்டு காலத்திற்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க, தன்னுடைய வகுப்பறையை நில வரைபடங்கள் கொண்டு அலங்கரித்திருக்கிறார் திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்.

குறிப்பாக 7மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறையில் பக்கச் சுவர்களில் பல்வேறு தலைப்புகளில் தமிழ்நாடு, இந்தியா, மற்றும் உலக வரைபடங்களை வைத்துக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.‌

இதுகுறித்து ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். வந்த முதல் நாளிலேயே கரும்பலகைக்கு முன் சாக்பீஸ் உடன் என்றால் மாணவர்களுக்கு அது சலிப்பைத் தரலாம்.‌

மாறாக மாணவர்களை வரவேற்க, வகுப்பறை வசீகரமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பள்ளியில் பல்வேறு கருப்பொருள்களில் நில வரைபடங்களைச் சேகரித்து மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.

இந்தியாவின் இயற்கை அமைப்பு, இந்திய நதிகள், இந்தியாவில் கரும்பு விளையும் இடங்கள், நெல் பயிரிடப்படும் இடங்கள், கோதுமை, பருத்தி விளையும் இடங்கள், இந்தியாவின் தொழிற்சாலைகள், மென்பொருள் தொழிலகங்கள் இயங்கும் இடங்கள், இந்திய அரசியல் வரைபடம், காலநிலை வரைபடம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நில வரைபடங்களைச் சேகரித்து, காட்சிப்படுத்தி இருக்கிறேன். இதே தலைப்புகளில் தமிழகம் மற்றும் உலக வரைபடங்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறேன்.

பல வண்ணங்களில் உள்ள நில வரைபடங்கள் மாணவர்களை மிகவும் கவரும். மாணவர்களின் புவியியல் அறிவை வளர்ப்பதில் நில வரைபடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.‌

இப்படி நில வரைபடங்களைக் காட்சிப்படுத்தி இருப்பதிற்கு ஓர் உளவியல் காரணமும் இருக்கிறது. மாணவர்கள் மதிய உணவு இடைவேளை மற்றும் இதர இடைவேளை நேரங்களில் தொடர்ந்து நில வரைபடத்தைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும்போது அது மனதில் முழுமையாகப் பதிகிறது. அதனால் அவர்கள் முழுமையான அரசியல் மற்றும் புவியியல் அறிவு பெறுவார்கள்'' என்று ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x