Published : 09 Oct 2021 08:03 PM
Last Updated : 09 Oct 2021 08:03 PM

பெகாசஸ் விவகாரம்: நேரடியாக வழக்குத் தொடுக்க விசிக முடிவு

சென்னை

பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க அட்டர்னி ஜெனரல் அனுமதி வழங்க இயலாது என்று மறுப்பு தெரிவித்ததால் நேரடியாக வழக்குத் தொடுக்க விசிக முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“பெகாசஸ் உளவுச் செயலி மூலம் ஒட்டுக் கேட்கும் விவகாரத்தில் நீதிக்குப் புறம்பாகச் செயல்பட்ட இந்திய உள்துறையின் இந்நாள், முன்னாள் செயலாளர்கள், பெகாசஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி கேட்டு இந்திய அட்டர்னி ஜெனரலுக்கு 13.08.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு பதிலளித்துள்ள அட்டர்னி ஜெனரல், 'இந்தப் பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருப்பதாலும், குற்றம் நடந்திருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க முடியாததாலும் இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி வழங்க இயலாது' என்று தெரிவித்திருக்கிறார்.

அட்டர்னி ஜெனரல் அனுப்பியுள்ள கடிதத்தில், 'பெகாசஸ் குழுமத்துக்கு எதிராகவும் அதன் இயக்குநர்கள், இந்திய உள்துறையின் தற்போதைய செயலாளர் அஜய் பல்லா, முன்னாள் செயலாளர் ராஜிவ் கௌபா ஆகியோருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971இன் பிரிவு 15 இன் கீழ் வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டு, தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றேன்.

13.08.2021 தேதியிட்ட உங்கள் கடிதத்தின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் நான் கவனமாக ஆராய்ந்தேன். நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-ன் கீழ் எனது ஒப்புதலுக்காக உங்கள் கடிதத்தில் சில குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளீர்கள்.

இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறதா அவ்வாறெனில் யாருக்கு எதிராகப் பயன்படுத்தியது என்பது விவாதத்துக்குரியதாகவும், தற்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வெளிப்படையாகப் பேசப்பட முடியாததாகவும் ( sub-judice) உள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் தீர்ப்பளிக்காத நிலையில், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-ன் பிரிவு 15-ன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதற்கு நான் ஒப்புதல் அளிப்பது பொருத்தமற்றது. எனவே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்,1971 பிரிவு 15-ன் கீழ் வழக்குத் தொடுக்க நான் அனுமதி மறுக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரல் அனுமதி வழங்க மறுத்துவிட்டதால் மூத்த வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது’’.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x