Published : 09 Oct 2021 12:45 PM
Last Updated : 09 Oct 2021 12:45 PM

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (அக். 09) வெளியிட்ட அறிவிப்பு:

"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, கரூர், பெரம்பலூர் மாவட்டம் அகரம் சிகூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் தலா 10 செ.மீ., குறைந்தபட்சமாக, கொடைக்கானல், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, தேனி மாவட்டம் பெரியாறு, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி, விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நாளை (அக். 10) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

09.10.2021: தெற்கு வங்கக்கசல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

10.10.2921, 11.10.2021: தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

09.10.2021 முதல் 11.10.2021: அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

09.10.2021: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x