

தமிழக முகாம்களில் இருந்து இலங்கைத் தமிழர்கள் சட்ட விரோதமாக வெளிநாடு தப்பிச் சென்றார்களா என்பது குறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக முகாம்களிலும், வெளியிலும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கணக்கெடுப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் 65 பேர் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
படகு மூலம் கனடாவுக்கு..
குறிப்பாக தமிழகத்தில் இருந்து கேரளா சென்று, அங்கிருந்து படகு மூலம் கனடா தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.
இதன் உண்மைத் தன்மை குறித்து இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸார் உதவியுடன் தமிழக க்யூ பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.