ஆரணி அருகே நிலம் அடமான தகராறில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை: பெற்றோரை இழந்து 3 குழந்தைகள் தவிப்பு

பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்.
பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்.
Updated on
1 min read

ஆரணி அருகே நிலம் அடமானம் தொடர்பான தகராறில் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு, கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி மூர்த்தி (45). இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களுக்கு யோகேஸ்வரி (16), ஹேமமாலினி (9) ஆகிய 2 மகள்களும், கௌரிசங்கர்(7) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், மூர்த்திக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தின் பத்திரத்தை குடும்ப செலவுக்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அடமானம் வைத்து மாமனார் ஏழுமலை(65) பணம் பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக சொத்து பத்திரத்தை மீட்காததால், நிலத்தில் விவசாயம் செய்ய மூர்த்திக்கு அடமானமாக பணத்தை கொடுத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக தெரியவருகிறது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று தகராறு ஏற்பட்டதால், வீட்டில் இருந்த சுத்தியலை கொண்டு மனைவி கலைச்செல்வியின் தலையில் மூர்த்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் கலைச் செல்வி உயிரிழந்தார். இதையடுத்து, விவசாய நிலத்துக்கு சென்று, அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு மூர்த்தியும் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலம் அடமானம் தொடர்பான தகராறில் பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்கும் 3 குழந்தைகளின் நிலை கிராம மக்களின் நெஞ்சை உலுக்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in