Last Updated : 08 Oct, 2021 08:05 PM

 

Published : 08 Oct 2021 08:05 PM
Last Updated : 08 Oct 2021 08:05 PM

தமிழகத்திலேயே முதலிடம்: விருதுநகர் மாவட்டத்தில் 88% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு 

விருதுநகர்

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் விருதுநகர் மாவட்டத்தில் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டி:

''விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 10-ம் தேதி 5-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. 18 வயது பூர்த்தியடைந்த 15 லட்சம் நபர்களில் இதுவரை 10 லட்சம் (64 சதவிகிதம்) பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 3.5 லட்சம் பேருக்கு (22.5 சதவிகிதம்) 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு லட்சம் நபர்களில் 60 ஆயிரம் நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

10-ம் தேதி 1,052 முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 1.10 லட்சம் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. இந்த முகாம் மூலம் 1 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நான்கு முறை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 2,11,108 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 80 சதவிகிதமும், விருதுநகர், திருச்சுழியில் 77 சதவிகிதமும், ராஜபாளையத்தில் 57 சதவிகிதமும், சிவகாசியில் 55 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி

இன்னும் 10 நாட்களில் மாவட்டத்தில் 75 சதவிகிதம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தித் திறன் ஆய்வில், விருதுநகர் மாவட்டத்தில் 88 சதவிகிதம் நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தித் திறன் அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளத குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் இதுவரை சுமார் 45,000 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகையில் 0.002 சதவிகிதம் மட்டுமே. தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தித் திறன் அதிகரித்துள்ளது.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் நாளை ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 25 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 162 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறியப்பட்டுள்ளன. வாக்குப் பதிவில் 725 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்''.

இவ்வாறு ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x