Published : 08 Oct 2021 03:00 PM
Last Updated : 08 Oct 2021 03:00 PM

தமிழ்நாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்கள் தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டைப்  பின்பற்றாதது ஏன்?- வீரமணி கேள்வி 

தமிழ்நாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாடு அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டு அளவைப் பின்பற்றாமல் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டைப் பின்பற்றுவது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’அகில இந்திய நுழைவுத் தேர்வான GAT-B (Graduate Aptitude Test in Biotechnology) மூலம் இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் பயோடெக்னாலஜி சார்ந்த பட்டமேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் மூலம் சேரும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகையாக பன்னிரெண்டாயிரம் ரூபாயும், ஆராய்ச்சி நிதியாக தலா எண்பத்து ஐந்தாயிரம் ரூபாய் (ரூ.85,000/-) வரையிலும் மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள எட்டு கல்லூரிகளில் கடந்த ஆண்டு இந்தத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் பட்டியலில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு காரணமா?

இந்த இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியது கவனத்துக்குரியது. மத்திய அரசு நிதிப்பங்களிப்பு செய்வதால், மாநில அரசின் 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு மாறாக மத்திய அரசின் 49.5% இட ஒதுக்ட்கீடை அமல்படுத்த ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், அதற்குத் தீர்வு காண முடியாமல் மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

கரோனா கால கல்லூரி சேர்க்கைக்கான அவசர வழக்காக இதை விசாரித்த நீதிமன்றம், மிக விரைவாக வழக்கை முடித்து மாணவர் சேர்க்கையை நடத்த ஏதுவாக 49.5% இடஒதுக்கீட்டு முறையையே கடந்த ஆண்டு கடைப்பிடிக்க உத்தரவிட்டது. இதற்கு மாறாக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அதற்கு மாறாக, ஒட்டுமொத்தத் திட்டத்தில் இருந்தும் அண்ணா பல்கலைக்கழகம் நீக்கப்பட்டுள்ளது எந்த வகையில் சரி? இது வளர்ச்சிப் போக்கா? வீழ்ச்சிப் போக்கா? சக மாணவர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் 10% இட ஒதுக்கீட்டில் GAT-B நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திய இதர பல்கலைக்கழகங்கள் மதுரை காமராஜர், காரைக்குடி அழகப்பா, கோவை பாரதியார் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகும். அவை 49.5% இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடித்ததோடு மட்டுமல்லாமல் கூடுதலாக, 10% இட ஒதுக்கீடு முறையையும் (Economically Weaker Section) கடைப்பிடித்தன. இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான செயலாகும்.

இந்த நான்கு பல்கலைக்கழகங்களும் இவ்வாண்டு பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவற்றில் இந்த ஆண்டாவது 49.5% மற்றும் 10% EWS முறையை ரத்து செய்து தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்கத் தமிழ்நாடு அரசு தக்க ஆவன செய்ய வேண்டும்.

இவை போக, சென்னை வேல்டெக் ரங்கராஜன் அறிவியல் தொழில்நுட்பக்கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி நேஷனல் கல்லூரி ஆகிய தனியார் கல்லூரிகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. இவற்றிலும் கடந்த ஆண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையே பின்பற்றப்பட்டுள்ளது. அங்கும் நமது 69% முறை கடைப்பிடிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுது, இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் அளவைப் பின்பற்றிட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

மாநில உரிமை

மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவும் (AICTE - All India Council for Technical Education), அகில இந்திய தொழிநுட்பக் கல்விக் குழுமமும் (AICTE - All India Council for Technical Education) வரையறுத்துள்ளன. இந்நிலையில் நிதிப்பங்களிப்பு என்னும் பெயரில் மத்திய அரசு மாநில இடஒதுக்கீட்டில் தலையிடுவது மாநில உரிமையை மீறும் செயலாகும். இதில் தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு விரைந்து நீதி பெற்றுத் தர வேண்டும்.

மாணவர்களின் கோரிக்கைகள்:

1. GAT-B நிதிப்பங்களிப்பு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் அந்த திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும்.

2. இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள இதர அனைத்து தமிழ்நாடு பல்கலைக்கழகங்களிலும் மற்றும் கல்லூரிகளிலும் மத்திய அரசின் 49.5%+ 10% EWS கைவிடப்பட்டு, தமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி, தமிழ்நாடு மாணவர்கள் இழந்த கல்வி உரிமையை மீட்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய கவனம் செலுத்தவேண்டும்’’.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x