

தமிழகத்தில் இன்று வடமாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (அக். 08) வெளியிட்ட அறிவிப்பு:
"தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று வடமாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு 15 செ.மீ., குறைந்தபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, ஈரோடு மாவட்டம் தாளவாடி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, வேலூர் மாவட்டம் பொண்ணை அணை, தேனி மாவட்டம் மஞ்சளாறு பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
08.10.2021 முதல் 10.10.2021: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
11.10.2021, 12.11.2021: தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகள்:
08.10.2021, 09.10.2021: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.