

பாஜக தேசியச் செயலர் எச். ராஜாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த செப்டம்பர் 2018 செப்டம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா பேசும்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஹரிஹரன் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் ஆஜராக கோரி பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியது. ஆனால் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதித்துறை நடுவர் பரம்வீர் உத்தரவிட்டார்.