Published : 07 Oct 2021 06:19 PM
Last Updated : 07 Oct 2021 06:19 PM

சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.6,92,500 அபராதம் விதிப்பு

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 2,830 கிலோ கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6,92,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (அக். 07) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் தமிழக அரசால் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986, பிரிவு-5-ன் கீழ் 01.01.2019 அன்று முதல் தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாணையின் படி, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்/உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் 01.01.2019 முதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில்/மரப்பொருட்கள், காகிதக் குழல்கள், துணி/காகிதம்/சணல் பைகள், காகித/துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம்.

சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கோயம்பேடு போன்ற மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்ப்பது தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் அறிவுறுத்தல்களை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து, அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்று கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136, தியாகராய நகர், பாண்டிபஜாரில் மாநகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்போது, 175 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19.08.2021 முதல் 06.10.2021 வரை 7,328 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 2,830 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.6,92,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x