Published : 07 Oct 2021 02:30 PM
Last Updated : 07 Oct 2021 02:30 PM

உள்ளாட்சித் தேர்தல்: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வடமாநில வாக்காளர்கள்- தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சேர்த்துள்ள 5000-த்திற்கு மேற்பட்ட போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்க் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதம் பின்வருமாறு:

’’வருகின்ற 9.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று (06.10.2021) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ளடங்கிய திருப்பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலும் வெளியிட்டுள்ள வாக்காளர் துணைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் தற்காலிகமாகக் கட்டிடப் பணியாற்ற வந்திருக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.

மேலும் இந்த வாக்காளர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது தெரிந்துவிடும் என்பதால் இந்த துணை வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களுடைய புகைப்படம் இணைக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்டத் தேர்தல் நேற்று 6.10.2021 முடிவடைந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியல் இரண்டாம் கட்த் தேர்தலுக்கு சட்டப்படி ஏற்புடையதல்ல. எனவே இத்தகைய போலி வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. அவர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்பது சட்டத்தின் நிலைப்பாடு.

இந்த துணைப் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு இணைக்கப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் ஆவார்கள்.

எனவே, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துத் தேர்தல் விதிமுறைகள் 1995-க்கு முரணாக எந்தவித ஆதாரமும் இல்லாமல், புகைப்படமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த துணைப் பட்டியலில் உள்ளடக்கிய போலி வாக்காளர்கள் அனைவரையும் வருகின்ற 9.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தடைவிதித்து, நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்து அனைத்து மேல்நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கேட்டுக் கொள்கிறேன்’’.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x