Published : 07 Oct 2021 01:46 PM
Last Updated : 07 Oct 2021 01:46 PM

அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா? உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்கமாட்டீர்களா?- பிரதமரிடம் டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை

கூடங்குளம் அணு உலைக் கழிவு விவகாரத்தில் அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா என்றும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு ஏற்காதா என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக இரண்டாவது மற்றும் மூன்றாவது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அணுமின் நிலையத்தில் உற்பத்தி ஆகவுள்ள அணுக்கழிவுகளைச் சேகரித்து வைக்க அணுமின் நிலைய வளாகத்திலேயே, ஆனால் அணு உலைக்கு வெளியே, பயன்பாடு முடிந்த ஆனாலும் கதிரியக்கம் கொண்ட கழிவுகளின் இருப்பிடம் அமைக்க மத்திய அரசின் இந்திய அணுமின் கழகம் தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை அணுசக்தி ஒழுக்காற்று முறை வாரியம் சென்ற 23.07.2021 அன்று வழங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும், சுற்றுச்சூழல் அமைப்புகளும், தன்னார்வலர்களும், அரசியல் கட்சிகளும் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இருப்பினும், அணுமின் நிலையம் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் புதிதாக மேலும் நான்கு அணு உலைகளைக் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து புதிய உலைகள் 3, 4 , 5 மற்றும் 6 ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் இந்திய அணுமின் கழகத்தால் தொடங்கப்பட்டுவிட்டன. முதல் இரு உலைகளை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்க அனுமதி பெற்றபோது இங்கு உருவாகும் கதிர்வீச்சு அடங்காத உலைகளின் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள், ரஷ்ய நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டதால், திரும்பவும் அந்நாட்டுக்கே அனுப்பிவைத்திட முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே இதற்கான சேகரிப்புக் கிடங்கு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு அப்பகுதி மக்களும் "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவுவும் இதனைக் கண்டித்ததோடு, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், இந்த அணுக்கழிவு கிடங்கினால் கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் பல லட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதால் இந்த அணுக்கழிவுகளை தமிழ்நாட்டுக்கு வெளியே கைவிடப்பட்ட கோலார் சுரங்கம் போன்ற எங்காவது வேறிடத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குச் சென்ற வாரம் கோரிக்கை வைத்தார்.

இந்த விவகாரம் குறித்த முழு விவரங்களையும் கேட்டறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுபற்றி திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திமுகவின் பொருளாளருமான டி.ஆர்.பாலுவுடன் ஆலோசனைகள் மேற்கொண்டார். அதன்பின் இந்தியப் பிரதமரும் அணுசக்தி அமைச்சருமான மோடியின் கவனத்திற்கு இந்த முக்கியப் பிரச்சினையைக் கொண்டுசென்று அணுமின் நிலையக் கழிவுகள் இருப்பிடத்தைக் கூடங்குளம் வளாகத்தில் அமைப்பதைக் கைவிடவும் தமிழகத்துக்கு வெளியே தக்க இடத்தில் அமைத்திடவும் உரிய முயற்சிகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்.பி. இன்று (07.10 .2021) பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

''சென்ற 23.07.2021 அன்று, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது உலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுகளைச் சேகரிக்கும் கிடங்கு ஒன்றை அணு உலைக்கு வெளியே அமைப்பதற்குத் தேவையான அனுமதி இசைவை அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இந்திய அணுசக்திக் கழகத்திற்கு வழங்கியுள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ள தகவல்படி, இந்தப் பயன்படுத்தப்பட்ட கழிவுக்கிடங்கு 128 கழிவுகளை உள்ளடக்கிய உறைகளையும் 4,328 கழிவுத் தொகுப்புகளையும் வைக்கத் தேவையான கொள்ளளவு கொண்டது. இதன் வாழ்நாள் காலம் 75 ஆண்டுகள். இத்திட்டம் சுற்றுச்சூழல் அனுமதிக்காக நிலுவையில் உள்ளது.

பயன்பாடு முடிந்த அணு உலைக் கழிவுகளை மின்நிலையம் அமைந்துள்ள இடத்திலேயே சேகரித்து வைப்பதால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம், பூவுலகின் நண்பர்கள் சார்பாக ஜி.சுந்தர்ராஜன் இந்திய அரசுக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் (எண்.4440) தீர்ப்பு அளிக்கையில் கூறியுள்ளதாவது:

'அணுமின் நிலைய வளாகத்திலேயே கழிவுகளை வைப்பதால் மக்கள் நல்வாழ்வுக்கும சுற்றுச்சூழலுக்கும் கடுமையான நெடுங்கால அபாயம் ஏற்படும். மத்திய அரசும் இந்திய அணுமின் சக்திக் கழகமும் இதனால் விளையக்கூடிய பாதிப்புகளைப் பற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளன. ஆனால், எதிர்காலத்தில் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு உருவாக்கப்படும் என்று சொல்வதைத் தவிர உருப்படியான தொலைநோக்குத் திட்டம் எதுவும் இந்திய அணுசக்திக் கழகத்திடம் இல்லை.

அணுசக்தி சட்டம் பிரிவு 17-ல், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்தும் சுற்றுப்புறவாழ் மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் தெளிவாக உறுதிபடக் கூறியுள்ளது. எனவே மத்திய அரசும் அணுசக்திக் கழகமும் உறுதியான நோக்குடன் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கை அமைத்திட உடனே திட்டமிட வேண்டும். மேலும், தற்போது மட்டுமல்லாமல் வருங்காலங்களிலும் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து மக்களையும் சுற்றுச்சூழல் நலத்தையும் பாதுகாப்பதை உறுதிசெய்ய அணு உலைக் கழிவுகளை உரிய முறையில் கையாளவும் கண்காணிக்கவும் போதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 மக்களுக்கு வழங்கியுள்ள உயிர் பாதுகாப்பு உரிமையைத் தூர வீசிவிட முடியாது என்பதால் ஐந்து ஆண்டுகளுக்குள் நிரந்தர நிலத்தடி சேமிப்புக் கிடங்கு வெகுவிரைவில் அமைக்கப்பட வேண்டும். அங்கே அணு உலைக் கழிவுகள் எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்துக்குத் தீர்வு காணும் வகையில் உரிய ஏற்பாடுகளைத் தாமதம் இன்றிச் செய்ய வேண்டும்'.

இவ்வறு மத்திய அரசு, இந்திய அணுசக்திக் கழகம், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம், அணுசக்தி ஆணையம், அணுசக்தி அமைச்சகம் ஆகிய அனைத்து அரசுத் துறைகளுக்கும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

பின்னர் மீண்டும் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தொடுத்த சிறப்பு மனுவின் மீது 8.5.2014 அன்று தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு தேசியக் கொள்கை உருவாக்கி அதன் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் பல வருடங்கள் உருண்டோடிய பிறகும் மத்திய அரசு இது தொடர்பாகத் திட்டம் உருவாக்கவோ அதனை நடைமுறைப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிரந்தரமாக அணு உலைக் கழிவுகளைச் சேமிக்கக்கூடாது என்று உத்தரவிட்டும் அங்கே இத்தகைய கிடங்கை ஏற்படுத்தும் திட்டத்துக்கு அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இசைவு அளித்திருப்பது உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும். நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு இல்லாத நிலையில் கூடங்குளம் வளாகத்திலேயே தற்போது அமைக்கப்பட உள்ள கிடங்கு காலப்போக்கில் நிரந்தரக் கிடங்காக உருவெடுத்துவிடும்.

மேலும், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளம் நிலையத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் அலகுகள் வெளியேற்றும் அணுக்கழிவுகளையும் அமைய உள்ள புதிய கிடங்கில் வைக்க அனுமதி தந்துள்ளது. இங்கே, ஐந்து மற்றும் ஆறாம் அணுமின் அலகுகளின் கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதால், கூடங்குளம் நிலையத்தில் மொத்தம் ஆறு அணுமின் அலகுகளும் மூன்று அணு உலைக் கழிவுகள் சேமிப்புக் கிடங்குகளும் இறுதியாக அமைந்திருக்கும். இதனால் கதிர்வீச்சு விளைவாக பேராபத்து நேரிடும் வாய்ப்பும் மக்களிடையே உயிர்ப் பாதுகாப்பு அச்சமும் பல மடங்கு அதிகரிக்கும்.

முதல் இரண்டு அலகுகளின் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் கழிவுகளை ரஷ்யாவுக்குத் திரும்ப அனுப்பி வைக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை இங்கே தங்கள் கவனத்திற்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதனால்தான் திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் கூடங்குளம் வளாகத்தில் உலைக்கழிவு கிடங்கு பரிசீலிக்கப்படவில்லை. ஆனால், ரஷ்யாவில் ஏற்கெனவே அவர்களது அணுக் கழிவுகள் பிரச்சினைகள் கடுமையான நிலையில் கூடங்குளம் கழிவுகளை ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்த சேமிப்புக் கிடங்கு இங்கேயே அமைக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் ஃபுக்குஷிமா மற்றும் ரஷ்யாவின் செர்னோபில் அணு விபத்துகளுக்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய விபத்து ரஷ்யாவின் மாயக் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் அமைக்க பட்ட உயர்மட்ட வல்லுநர் குழு ஃபுக்குஷிமா விபத்து பற்றித் தீவிர விசாரணை நடத்தியபின், அங்கே அணுமின் நிலைய வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்த கழிவுகள் கிடங்கின் காரணமாகவே, விபத்து பன்மடங்கு கடுமையான அழிவை ஏற்படுத்தியது என்ற முடிவுக்கு வந்துள்ளது. அதைப் போல அமெரிக்காவும் மற்ற சில நாடுகளும் மேற்கொண்ட ஆய்வுகளிலும் இதே முடிவுக்குத்தான் வந்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால், கூடங்குளம் அணு உலைக் கழிவுகள் கிடங்கு தொடர்பான வழக்கில், இதுபோன்ற ரஷ்யத் தொழில்நுட்ப வகை அழுத்தம் ஊட்டப்படட கனநீர் அணு உலை எரிபொருள் சார்ந்த அணுமின் நிலையங்களில், நெடுங்கால உலைக்கழிவு பாதுகாப்பு சேமிப்புக் கிடங்கு வசதிகள் விஷயத்தில் இந்தியாவுக்கு முன் அனுபவம் ஏதும் இல்லை என்று இந்திய அணுசக்திக் கழகம் 6.12.2017 அன்று சமர்ப்பித்த தனது பதில் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி முதல் இரண்டு அலகுகளின் கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கவும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே கழிவுகள் சேமிப்புக் கிடங்கு அமைக்க மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தால் தரப்பட்ட அனுமதியை ரத்து செய்து திரும்பப் பெற்றிடவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து அணுமின் நிலையங்களின் பயன்பாடு முடிந்த அணு உலை எரிபொருள் கழிவுகளை பத்திரமாகப் பாதுகாக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு உருவாக்கப்பட வேண்டும்.

இந்த நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்குக்கு, ஒரு தேசிய முன்னுரிமை திட்டமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் வசிக்காத நிலப் பகுதியில் கட்டப்பட வேண்டும். சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழகத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிமுக்கியமான இந்த விஷயத்தில் கடும் காலவிரயம் ஆகிவிட்டதை உணர்ந்து, பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x