Last Updated : 07 Oct, 2021 03:13 AM

 

Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

டிஏபி, யூரியா உரத் தட்டுப்பாட்டால் பெரிதும் சிரமப்படும் விவசாயிகள்: முன்னுரிமை அடிப்படையில் தேவைக்கேற்ப உரம் விநியோகிப்பதாக வேளாண் துறை தகவல்

சென்னை

டிஏபி, யூரியா உரத் தட்டுப்பாட்டால் பெரிதும் சிரமப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசிடம் தமிழகத்துக்கு தேவையான உரம் பெறப்பட்டு, தட்டுப்பாடில்லாமல் விநியோகிக் கப்படுவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்ட கிராமங்களில் நடவு மற்றும் நேரடி விதைப்புக்கு அடியுரமாக டிஏபி உரம் தேவைப்படுகிறது. தற்போது இந்த உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. டிஏபி உரத்துக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்தவிலை உயர்வுக்கான கூடுதல் மானியத் தொகையை மத்தியஅரசு ஏற்காததால், உர உற்பத்திநிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இறக்குமதியும் குறைக்கப்பட்டுள்ள தால் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உரத் தட்டுப்பாட்டை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி சம்பா சாகுபடிக்குத் தேவையான உரத்தில் 3-ல் ஒரு பங்கு மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. டிஏபி உரம் போதியளவு கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். யூரியா உரமும் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் தனியார் கடைகள் உர விலையை ரூ.400 முதல் ரூ.500 வரை உயர்த்தி விற்கின்றனர்.

மேலும் நுண்ணூட்டச் சத்து, இடுபொருட்களை கூடுதலாக வாங்கினால் மட்டுமே உர மூட்டை வழங்கப்படும் என்று விவசாயிகளை வியாபாரிகள் நிர்பந்திக்கின்றனர்.

தனியாருக்கு முன்னுரிமை தராமல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உரத்தைஒதுக்கினால் விவசாயிகளின் சிரமத்தைத் தவிர்க்கலாம். மத்திய அரசின் உரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்.பி. இருக்கிறார். தமிழக அரசும், கனிமொழியும் சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி கூடுதல் உரங்களைப் பெற்று உரத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது 74,300 மெட்ரிக் டன் யூரியா, 35,970 டன் டிஏபி, 41,110 டன் பொட்டாஷ், 1,18,790 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளன. இதில், டெல்டா மாவட்டங்களில் 25,300 டன் யூரியா, 11,540 டன் டிஏபி, 13,800 டன் பொட்டாஷ், 23,410 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளன. இதர மாவட்டங்களில் 49,000 டன் யூரியா, 24,130டன் டிஏபி, 27,950 டன் பொட்டாஷ், 95,560 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளன.

மேலும் மத்திய அரசிடம் இருந்து தமிழக ஒதுக்கீடாக காரைக்கால் துறைமுகம் வந்துள்ள 15 ஆயிரம் டன் யூரியா, சரக்கு ரயில், லாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன. நேற்று மட்டும் (அக்.6) 2,600 டன் யூரியா தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட் டன. ஈரோடு, கடலூர், பெரம்பலூர்,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங் களுக்கு லாரி மூலம் சுமார் 200 டன் யூரியா அனுப்பப்பட்டது.

உள்ளூரில் உள்ள உரத் தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்துக்கான அக்டோபர் மாதயூரியா ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, மெட்ராஸ் பெர்ட்டிலைசர் லிமிடெட் 34 ஆயிரம் டன், ஸ்பிக் உர நிறுவனம் 43,500 டன், மங்களூர் கெமிக்கல் பெர்ட்டிலைசர் நிறுவனம் 3 ஆயிரம் டன் தயாரித்து வழங்குகின்றன. தேவைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் உரம் விநியோகிக்கப்படுகிறது.

இவைதவிர, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்தில் தமிழகத்துக்கு 48 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை,கங்காவரம், காக்கிநாடா துறைமுகங்கள் வழியாக தமிழகம் வரவுள்ளன. முடிந்தவரை தட்டுப்பாடில்லாமல் உரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x