விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு விரைவில் 28 ஏசி பேருந்துகள்

விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு விரைவில் 28 ஏசி பேருந்துகள்
Updated on
1 min read

கோடை வெயிலில் பயணிகள் வசதிக்காக விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் மேலும் 28 ஏசி பேருந்துகள் வரும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, தஞ்சாவூர், நாகர்கோவில் உள் ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுமார் 1,200 விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னையில் இருந்து மட்டும் 450-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சம் பேர் விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

இதற்கிடையே, கோடை வெயிலில் பயணிகள் வசதிக்காக ஏசி விரைவுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏசி பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. மற்ற பேருந்துகளைக் காட்டிலும் பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.

தற்போது 22 ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் கூடுதலாக 28 ஏசி பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஏசி பேருந்துகள் கோடை வெயிலில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in