ஊரக உள்ளாட்சித் தேர்தல்; காலை 9 மணி நிலவரப்படி 7.72% சதவீதம் வாக்குப்பதிவு: மாநிலத் தேர்தல் ஆணையர் தகவல்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; காலை 9 மணி நிலவரப்படி 7.72% சதவீதம் வாக்குப்பதிவு: மாநிலத் தேர்தல் ஆணையர் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 7.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்.6ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், காலை 7 மணிக்குத் தொடங்கி முதல் இரண்டு மணி நேரத்தில் 7.72% சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். 9 மாவட்டங்களிலும் சிறப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

மேலும், தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என மொத்தம் 39,408 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், 129 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, முதற்கட்ட வாக்குப்பதிவு கண்காணிப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 74 மையங்களில் எண்ணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நெல்லை வாக்குப்பதிவு நிலவரம்:

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பாப்பாகுடியில் காலை 9 மணி நிலவரப்படி 8% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அம்பாசமுத்திரத்தில் காலை 9 மணி நிலவரப்படி 7.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சேரன்மகாதேவியில் காலை 9 மணி நிலவரப்படி 13% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாணூரில் காலை 9 மணி நிலவரப்படி 9% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தென்காசி வாக்குப்பதிவு நிலவரம்:

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் ஊராட்சியில் 12.02%, கடயம் ஊராட்சியில் 10.08%, கீழப்பாவூரில் 10.65%, மேலநீதிநல்லூரில் 11.24%, வாசுதேவநல்லூரில் 9.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 5 ஊராட்சிகளில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 10.78% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in