Published : 06 Oct 2021 03:11 AM
Last Updated : 06 Oct 2021 03:11 AM

கடந்த ஆட்சியில் மின் தேவையில் 22% மட்டுமே சொந்தமாக உற்பத்தி: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

கரூர்

கடந்த அதிமுக ஆட்சியில் மின் தேவையில் 22 சதவீதம் மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் கொளந்தானூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதம் அடைந்திருப்பதை நேற்று பார்வையிட்ட அவர், பின்னர் அங்கு குடியிருந்தோர் பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் ஒருநாள் மின் தேவை 16,000 மெகாவாட். இதில் வெறும்22 சதவீதம் மட்டுமே கடந்த அதிமுக ஆட்சியில் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது. மீதம் உள்ளவற்றை மத்திய அரசிடம் இருந்தும், தனியாரிடம் இருந்தும் வாங்கிப் பயன்படுத்தினர்.

தற்போது, மின் உற்பத்திக்கு ஆகும் செலவைக் குறைத்து, அதிக விலை கொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒடிசாவில் இருந்து நிலக்கரி வாங்கப்படுகிறது. நிலக்கரியை வாங்கி இங்கு உற்பத்தி செய்வதற்கு பதிலாக, அங்கேயே மின் உற்பத்தி செய்து மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x