Last Updated : 05 Oct, 2021 03:13 AM

 

Published : 05 Oct 2021 03:13 AM
Last Updated : 05 Oct 2021 03:13 AM

50 சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பிறகும் பெண்களுக்கான உள்ளாட்சிப் பிரதிநிதித்துவத்தில் தொடர்ந்து அதிகாரம் செலுத்தும் ஆண்கள்

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழகத்தில் முதன்முறையாக கடந்த 2019-ம் ஆண்டு 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கும் தேர்தலாக 2019 அமைந்தபோதிலும், உள்ளாட்சியில் பதவியை ஆண்களே அபகரிக்கும் நிலை நிலவுகிறது.

விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆண் வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதியில் ஆண்களும், பெண்கள் போட்டியிடும் பகுதியில் தம்பதியினருமாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பெண் வேட்பாளர்கள், தங்கள் கணவரின் புகைப்படம் அடங்கிய துண்டு பிரசுரத்தை மக்களிடம் விநியோகிப்பது மட்டுமின்றி, என்ன பணிகள் நடைபெறும், என்ன வாக்குறுதிகள் என கணவரையே பிரசாரம் செய்ய அனுமதிக்கின்றனர். இந்த நிலை அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்றதை காண முடிந்தது.

மேலும் ஊரில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் ப்ளக்ஸ், சுவரோட்டிகள் அனைத்திலும் கணவன் மனைவி இருவரும் கைகூப்பி வாக்கு சேகரிக்கும் போஸ்டர்கள் ஊரை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

இதுகுறித்து. கடலூர் மாவட்ட அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழியிடம் பேசிய போது அவர் கூறியது:

வெறும் இடஒதுக்கீட்டால் மட்டுமே பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வந்து விடாது என்பதையே இது காட்டுகிறது. பிரச்சாரத்திலேயே இதை முறியடிக்க வேண்டும். இச்சிக்கலைத் தடுக்க தேர்தலின் போதே பெண் போட்டியிடும் ஊராட்சிகளில் பெண் படம் மட்டுமே இடம்பெற வேண்டும் என்ற வகையில் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

பல கிராமங்களில் பெண்கள் தேர்வானாலும் அவர்களின் கணவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஊராட்சிக்கு வரும் நிதியை எந்த திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என தேர்வான பெண் தலைவரின் கணவர்தான் தீர்மானிக்கும் நிலையில், பெண் கையொப்பம் மட்டும் இடுகிறார். இதுபோன்ற நிலை தொடரக் கூடாது. இந்த முறை அதிக எண்ணிக்கையில் எல்லா கிராமங்களிலும் பெண்கள் தேர்வாகியிருப்பதால், மாற்றம் ஏற்படவாய்ப்புள்ளது என்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆரியநத்தம் கிராமத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அற்புதவள்ளி என்பவரிடம் போஸ்டரில் கணவரின் படத்தை அச்சிட்டு வாக்கு சேகரித்தது குறித்து கேட்டபோது, “நான் பி.எட் பட்டதாரி. எனது கணவர் பள்ளி படிப்போடு நிறுத்திக் கொண்டார். இருப்பினும் கிராம நிர்வாகம் குறித்த அனுபவம் எனக்கு குறைவு. அதற்கு எனது கணவர் உறுதுணையாக இருக்கிறார். அதனால் அவரது படத்தை போட்டேன்” என்றார்.

அதேஊரில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அமலா என்ற வேட்பாளரின் கணவர் சந்தோஷ்குமார், கணவன் மனைவி அடங்கிய போஸ்டரை அச்சடித்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேசினோம், “இந்த வார்டில் நான் நன்கு அறிமுகமானவன். எனது மனைவி பட்டதாரி, நான் பள்ளிப்படிப்பு தான் முடித்திருக்கிறேன். எனக்கு போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே எனது மனைவியை போட்டியிடச் செய்திருக்கிறேன். அவருக்கு வழிகாட்டியாக இருப்பதில் தவறேதும் இல்லை. இதில் அவர் பதவியை நான் எப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்ய முடியும்?” என்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள், தலைவர்களுக்கான அதிகாரம் குறித்த கருத்தரங்கம் காணொலி காட்சி வாயிலாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற்றது. இதில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு மாற்றாக அவரது கணவர்களும் மகன்களுமே பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பெண் தலைவர்களின் கணவர்களிடம் பேசியபோது, “அவர்களுக்கு போதிய அனுபவம் கிடையாது, எப்படி பேச வேண்டும் என்று தெரியாது, அதனால் நாங்கள் கலந்து கொண்டோம்” என்றனர்.

இப்படி பல விதங்களில் பெண் பிரதிநிதிகள் பெயரளவிற்கு போட்டியிடுவதும், அவர்களை குடும்பத்தில் உள்ள ஆண்களே முழுமையாக இயக்குவதும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பார்க்க முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x