

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் (அக். 02) வெளியிட்ட அறிவிப்பு:
தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் (5.8 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தலா 8 செ.மீ., குறைந்தபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
02.10.2021: இலங்கை கடற்கரைக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.