பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நூதன பிரச்சாரம்

பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நூதன பிரச்சாரம்
Updated on
1 min read

தமிழகத்தில் வாக்காளர்களைக் கவர அனைத்து அரசியல் கட்சிகளும் நூதனப் பிரச்சாரங்களில் இறங்கியுள்ள நிலையில், நூறு சதவித வாக்குப்பதிவை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையமும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களாக இதற்கென தீவிரக் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை இளம் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க மனித சங்கிலி, விழிப்புணர்வு ஊர்வலம், கல்லூரிகளில் தூதுவர்கள் நியமனம் என தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

வாகனங்களில் வாக்குப் பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஸ்டிக்கர்கள் ஒட்டுவது, பேருந்துகளில் நடத்துனர்களின் பணப்பைகளில் வாக்குப்பதிவு நாள் குறித்து ஸ்டிக்கர் ஒட்டுவது உள்ளிட்ட பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றது. வாக்குப்பதிவில் ஆண், பெண் இருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஆனால் ஆண் வாக்காளர்கள் அளவுக்கு அல்லாமல், வாக்குப் பதிவில் சிறிய அளவேனும் பின் தங்கியே பெண் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதனால் பெண் வாக்காளர்களை, வாக்குச்சாவடிக்கு அழைத்து வரும் வகையில் நூதன பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.

பெண்களை அதிகம் கவரும், தொலைக்காட்சி நெடுந்தொடர்களையே அதற்கு ஒப்பீட்டாய் சுட்டிக்காட்டி பெண்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், `லட்சுமியம்மா எப்போதும் மெகா சீரியல் பார்க்க 100 சதவீதம் ரெடி. ஆனா வாக்களிக்க?’ என்று வைத்துள்ள பதாகை பெண்களை அதிகம் யோசிக்கவும் வைத்து, வாக்களிப்பதன் அவசியத்தையும் அவர்களுக்கு ரத்தின சுருக்கமாய் புரிய வைத்துள்ளது. இவ்வாசகம் பெண்கள் மத்தியில் மிக அதிக அளவில் பிரபலமடைந்து வருவதால் கோயில்கள், நியாய விலைக்கடைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே போல் பதாகைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in