கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 7 பேருக்கு ஜூன் 7 வரை காவல் நீட்டிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 7 பேருக்கு ஜூன் 7 வரை காவல் நீட்டிப்பு
Updated on
1 min read

பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் உட்பட 7 பேருக்கு வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களில் யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்ற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுவராஜ், வேலூர் சிறையிலும் மற்ற 6 பேர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 10 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 3-ம் தேதி, 1,318 பக்க குற்றப்பத்திரிகை நகல் 17 பேருக்கும் வழங்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட 6 பேருக்கும் காணொலி காட்சி மூலம் யுவராஜிக்கும் ஜூன் மாதம் 7-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி எஸ்.ராமதிலகம் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in