தஞ்சாவூரில் கோயிலைச் சுற்றி 20 ஆண்டுகளாக குவிந்த 10 டன் குப்பைகள் அகற்றம்

தஞ்சாவூர் கொண்டிராஜபாளையத்தில் உள்ள யோகநரசிம்மர் கோயில் அருகே குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள்.
தஞ்சாவூர் கொண்டிராஜபாளையத்தில் உள்ள யோகநரசிம்மர் கோயில் அருகே குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள்.
Updated on
1 min read

தஞ்சாவூரில் கடந்த 20 ஆண்டுகளாக கோயில் அருகில் குப்பைகளை கொட்டி, குப்பை மேடாக பயன்படுத்தி வந்த இடத்தினை "அழகிய தஞ்சை 2005" என்ற தன்னார்வ அமைப்பின் ஏற்பாட்டால் குப்பைகள் அகற்றப்பட்டு தற்போது தூய்மையான இடமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் கொண்டிராஜாபாளையம் அருகே யோகநரசிம்மர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கிழக்கு பகுதியில் சுமார் 80 அடி நீளம், 20 அடி அகலத்துக்கு அப்பகுதியில் வசிப்பவர்கள் குப்பைகளை கொட்டி குப்பைமேடாக பயன்படுத்தி வந்தனர்.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்தது. இதையடுத்து "அழகிய தஞ்சை 2005" அமைப்பின் திட்ட இயக்குநர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், இந்த குப்பைகளை அகற்றி அங்கு கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கடந்த வாரம் முறையிட்டனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் ஆகியோரது மேற்பார்வையில், கோயில் அருகே குவிந்திருந்த சுமார் 10 டன் குப்பைகளை கடந்த இருநாட்களாக மாநகராட்சி பணியாளர்கள், பொக்லீன் இயந்திரம் மூலம் கடந்த இரு நாட்களாக அகற்றினர். மேலும் கோயில் மதில் சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும் அகற்றி அங்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டது.

இதுகுறித்து "அழகிய தஞ்சை 2005" அமைப்பின் திட்ட இயக்குநர் ஆடிட்டர் ரவிசந்திரன் கூறுகையில், "யோகநரசிம்மர் கோயில் அருகே குப்பைகளை கொட்டி அப்பகுதியை குப்பைமேடாக வைத்திருந்தனர். பல ஆண்டுகளாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. தற்போது மாவட்ட ஆட்சியரிடம் கூறியதும், குப்பைகளை அகற்ற உத்திரவிட்டார்.

அதன்படி தற்போது குப்பைகளை முதலில் நாங்கள் அகற்ற துவங்கினோம், எங்களோடு மாநகராட்சியினரும் பின்னர் இணைந்து குப்பைகளை அகற்றியுள்ளோம். மேலும் அந்த இடத்தில் சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைத்து, பூச்செடிகள் நட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய உள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in