Last Updated : 01 Oct, 2021 06:54 PM

 

Published : 01 Oct 2021 06:54 PM
Last Updated : 01 Oct 2021 06:54 PM

தமிழக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தியதில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 4-வது இடம்

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில்

கரோனா தடுப்பூசி செலுத்தியதில் தமிழக அளவில் கன்னியாகுமரி மாவட்டம் 4-வது இடம் பெற்றுள்ளது. அரசு அலுவலர்களின் விழிப்புணர்வுடன் கூடிய பணிக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழக அளவில் கரானா தடுப்பூசி போட்டுக்கொண்டதில் கன்னியாகுமரி மாவட்டம் 4-வது இடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "கரோனா 3-வது அலையில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ளும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார மையங்கள், மற்றும் முகாம்கள் வாயிலாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கடந்த 12-ம் தேதி நடந்த முதல் மெகா தடுப்பூசி முகாமில் 68,350 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 19-ம் தேதி நடந்த இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 28,562 பேரும், கடந்த 26-ம் தேதி நடந்த 3-வது மெகா தடுப்பூசி முகாமில் 72,000 பேரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடையே கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதன் அடிப்படையில் இதுவரை முதல் கட்டமாக 9,53,345 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 2,76,461 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மற்றும் நடவடிக்கைகள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தியதற்குக் காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இதைப் போல் குமரி மாவட்டம் தடுப்பூசி செலுத்தியதில் 4வது இடம் பெற்றதற்காக சமூக ஆர்வலர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x